கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திங்களூர் கோவில்
சந்திர தோஷ பரிகாரத் தலம்
நவக்கிரக ஸ்தலங்களில் திங்களூர் இரண்டாவது ஸ்தலம். தட்சன் தனது 27 புத்திரிகளையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். 27 மனைவிகளிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான். மற்ற 26 மனைவிகளும் தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த ஸ்தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான். ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து சந்திரனின் சாபத்தைப் போக்கினார்.
சந்திரன் இத்தல இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்றதால், இத்தலம் சந்திரனுக்கு உரிய தலமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஒளி மூலவர் கைலாசநாதர் திருமேனியில் விழுவதை இன்றும் காணலாம். பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில், கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதை தொடர்ந்து தனி சன்னதியில் அமைந்துள்ள சந்திர பகவானுக்கு லட்சார்ச்சனை நடக்கும்.
இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இறைவன் மற்றும் தனி சந்நிதியில் காட்சி தரும் சந்திரனை அபிஷேகம், அர்ச்சனை, நெய் விளக்கு ஏற்றி வழிபட, சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு லிங்கத்தின் மீது சூரிய ஒளி படுவதால், அன்று சூரிய பூஜையும், மறுநாள் பெளர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும்.
தல வரலாறு :
இக்கோவில் ஏழாம் நூற்றாண்டில் ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. திராவிடக் கட்டிடக் கலையை பின் பற்றி கட்டப்பட்டுள்ளது இக்கோவில். அப்பூதியடிகள் என்ற 63 நாயன் மார்களில் ஒருவரான இவர் திங்களூரை சேர்ந்தவர். இவர் சிவபெருமான் மீது கொண்ட பற்றால், சிவபெருமான் மீது பக்தி கொண்ட திருநாவுக்கரசர் பெயரை தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயர் வைத்தார். மேலும் திருநாவுக்கரசர் பெயரில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்து வந்தார்.
ஒரு நாள் திருநாவுக்கரசர் திங்களூருக்கு வந்த போது அப்பூதியடிகள் பற்றி கேள்விப் பட்டு அவரை காண சென்றார். திருநாவுக்கரசரை கண்ட அப்பூதியடிகள் அவரை வரவேற்று உணவு அளிக்க விரும்பினார். தன் மகனை வாழை இலை பறித்து வருமாறு அனுப்ப அங்கே அவனை பாம்பு தீண்டியது.
தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி கேட்டால் திருநாவுக்கரசர் சாப்பிட மாட்டாரோ என்று என்னிய அப்பூதியடிகள் அதனை மறைத்து உணவு அளித்தார். மகனை பற்றி அறிந்த திருநாவுக்கரசர், அவனின் உடலை திங்களூர் திருக்கோவிலுக்கு எடுத்துச் சென்று “ஒன்று கொலாம் அவர் சிந்தை” என்று பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திங்களூர் கோவில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.