குலம் தழைக்க வைக்கும் தண்டு மாரியம்மன்
கோவை அவினாசி சாலையில் மேம் பாலம் அருகே வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை தண்டு மாரியம்மன். வியாபாரத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி நமது மக்களிடையே ஒற்றுமையை குலைத்தனர். அதன் மூலம் நம்மை அடிமைகளாக மாற்ற சதித்திட்டம் தீட்டினர்.
இந்த நேரத்தில் தான் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினார்கள். அதே போல் மைசூர் மன்னன் திப்புசுல்தான் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க் கத்துணிந்தான். நமது மக்களின் அடிமை வாழ்வை மீட்கும் வகையில் படையுடன் கோவை வந்து கோட்டை மதிலுக்குள்ளே தங்கியிருந்தான். அப்போது ஒரு படை வீரனின் கனவில் அன்னை தண்டு மாரியம்மன் காட்சி கொடுத்தாள். தன் அருள் மழையை மக்களுக்கு வழங்க நினைத்த அவள் தன் இருப்பை உணர்த்தி வெளிப்பட்டு எழுந்தருளினாள்.
தண்டு என்னும் சொல்லுக்கு படை வீரர்கள் தங்குவதற்கு அமைக்கப்படும் கூடாரம் என்பது பொருள். தண்டு என்ற சொல்லே அன்னையின் பெயருக்கு அமுதூட்டும் சிங்கார சொல்லாய் சிறப்புப் பெயராய் அன்னையின் பெயருடன் சேர்ந்து வழங்கி வருகிறது. அன்னை தண்டு மாரியம்மன் முப்பெருந்தேவியாய், அகிலாண்ட நாயகியாய், ஆதிபராசக்தியாய், சாந்த சொரூபிணியாய் சகல சவுபாக்கியங்களையும் வாரி வழங்கும் கற்பகரட்சாம்பிகையாய் எழுந்தருளி கோவை நகரை அரசாட்சி செய்யும் அன்னையாய் திகழ்ந்து வருகிறாள்.
துர்கா தேவியின் அம்சமாக வீற்றிருக்கும் தண்டு மாரியம்மன் தீராத நோய் தீர்ப்பதில் வல்லவள். செவ்வாய்க்கிழமைகள் ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி 9 வாரம் வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். தண்டு மாரியம்மன் சன்னதிக்கு மேல்புறம் அரசமரத்தின் கீழ் கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். கிழக்குப்பகுதியில் நவக்கிரக பீடம் உள்ளது.
முன் மண்டபத்தில் அஷ்ட லட்சுமியின் திருஉருவங்கள் உள்ளன. கோவிலின் வடக்கு பகுதியில் கருப்பராயன், முனியப்பன் ஆகிய தெய்வங்களின் பழமை வாய்ந்த திருக்கோலங்கள் உள்ளன. இந்த கோவிலின் தல விருட்சம் தொரட்டி மரம் ஆகும். தல விருட்சத்திற்கு நெய்விளக்கேற்றி வழிபட்டால் வழிபடுபவர்களது குலம் தழைக்கும்.
கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அம்மன் கோவில்களில் முதன் முறையாக அம்மனின் உற்சவ மூர்த்தியை தங்க ரதத்தில் வைத்து பவனி வந்த சிறப்பு இந்த கோவிலையே சேர்ந்ததாகும். பக்தர்கள் தாங்கள் நினைந்த காரியங்கள் நிறைவேற அம்மனை தங்கத்தேரில் வைத்து தங்கள் குடும்பத்தினருடன் தாங்களே அம்மன் தேரினை திருஉலா செய்து வழிபட்டு அம்மனின் திருவருள் பெற்றுச் செல்கின்றனர்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post குலம் தழைக்க வைக்கும் தண்டு மாரியம்மன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.