அனைத்து போகங்களும் கிடைக்க பெற்று பெரு வாழ்வு வாழ
சூல விரத மகிமை
சிவபெருமானின் அருள் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் விரதங்களில், சோம வார விரதம், மகா பிரதோஷ விரதம்,கேதார கௌரி விரதம்,மகா சிவராத்திரி விரதம் போன்றவை அதிகமாக மேற்கொள்ளப் பட்டு வருபவை. அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூல விரதம் என்பதும் சிறந்த பலன்களைத் தர வல்லது. தை அமாவாசையன்று இவ்விரதம் மேற்கொள்ளப் படுகிறது.
சகல விதமான சவு பாக்கியங்களையும் அளிக்கக் கூடியது அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூலவிரதம். சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும்போது அதாவது தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும். அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் வணங்கி, வழிபட்டு, வெளியே சென்று சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய சிவபெருமானின் விக்கிரகத்தை வைத்து கொண்டு அபஷேகமும், நைவேத்தியமும் செய்ய வேண்டும்.
பிறகு மதியம் வேளையில் திருநீறு, ருத்ராட்ச மாலைகளை தரித்த சிவ பக்தர்களுக்கு தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறு தான தர்மம் செய்ய வேண்டும். அதன் பின் சிவாலயத்திற்கு சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து திருக்கோவிலுக்கு நம்மால் முடிந்த காணிக்கைகளை செலுத்தி இறைவனை வணங்க வேண்டும். பிறகு சிவ பக்தர்களுடன் அமர்ந்து ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும்.
இப்படியாக இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய விரோதிகள் அனைவரையும் வென்று, தீராத கொடிய நோய்களிலிருந்தும் விடுபட்டு தீர்க்காயுள், புத்திரச் செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களையெல்லாம் அடைந்து, சகல போக பாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள். முடிவில் சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள்.
மகாவிஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து, தனக்கு ஏற்பட்ட பொல்லாத தலைவலியை நீங்கப் பெற்றார். மேலும் கொடிய அசுரனான காலநேமியைச் சம்ஹாரம் செய்தார். ஜமதக்னி முனிவரின் புதல்வனும், மிக பலசாலியுமான பரசுராமரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து அதன் மகிமையால் தன் விரோதியும் இராவணனையும் மிஞ்சும் பராக்கிரமசாலியான கார்த்தவீர்யார்ஜுனனைக் கொன்றார்.
பிரம்மனும் சூல விரதத்தை அனுஷ்டித்து தனக்கு ஏற்பட்டிருந்த கொடிய வயிற்றுவலி நீங்கப்பெற்றான். சுதர்மன் என்பவன் இவ்விரத மகிமையால் மரணத்தையே வென்று ஜயமடைந்தான். மேகாங்கன் என்னும் அரசனும் இவ்விரதத்தை கடைபிடித்து அதன் பயனாக வித்வான்களான ஆயிரம் புத்திர, பௌத்திரர்களைப் பெற்றெடுத்து, அளவற்ற போகங்களையும் அனுபவித்து இறுதியில் சிவலோகத்தை அடைந்தான்.
தோஷ நிவர்த்திப் பெறுவார்கள் இன்னும் ஏனைய பாபங்களிலிருந்தும் விடுபட்டு, பரமேஸ்வரரின் திருவருளால் சகல ஐஸ்வர்யங்களையும் அடைவார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த இச்சூல விரதத்தின் மகிமையைப் பற்றி மகாபலட்டரான வீரபத்திரர், சிறந்த கணத் தலைவரான பானுகம்பனுக்குக் கூறியருளினார் என்று எனக்கு வியாச முனிவர் அறிவித்திருக்குறார்.
சூலமங்கை தலம் அமைந்துள்ள இடம்
கும்பகோணம் – தஞ்சாவூர் வழித்தடத்தில் அய்யம்பேட்டை மாற்று பாதையில் வந்து ரெயில்வே நிலைய சாலையில் திரும்பி சென்றால் வெகு சமீபத்தில் உள்ள சூல மங்கலம் என்னும் இவ்வூர் அமைந்துள்ளது. ஸ்ரீ அலங்கார வள்ளி உடனுறை ஸ்ரீ கிருத்திவாசேஸ்வரர் திருக்கோவிலே சூல மங்கை என்பதாகும். இப்போது சூலமங்கலம் என்று விளங்குகிறது. இக்கோவில் தலம் (சூலமங்கை) மூர்த்தி (கிருத்திவாசர்) தீர்த்தம் (சூல தீர்த்தம்) என்னும் 3–ம் கொண்டுள்ளது.
சூலமங்கை தலத்தின் சிறப்பு
அஸ்திரதேவர் (சூல தேவர்) வழிபட்டு திருவிழா காலங்களிலும், தீர்த்த வாரியிலும் தான் முதன்மையாக விளங்க தக்க வரத்தை இறைவனிடம் பெற்ற தலம். சப்த மங்கையரில் சூல மங்கை வழிபட்ட தலம். பெரிய சிவாலயம், கல் திருப்பணி, ஊரின் பெயருக்கேற்றவாறு கோவில் வெளி வாயிலின் புறத்தில் சூலம் தலை மீது ஏந்தியவாறு சூல தேவர் உள்ளார்.
சூல விரதத்தன்று சூல தேவரால் பூஜிக்கப்பெற்ற பெருமை வாய்ந்த சூல மங்கைக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ அலங்கார வல்லி சமேத ஸ்ரீ க்ருத்திவாசேசுவரர் ஆலயத்தை வழிபட்டு அங்கு நடைபெறும் ரிஷப வாகனப் புறப்பாட்டைக் கண்டு களித்துத் தீர்த்தவாரியையும் தரிசிக்கலாம்.
தல மகிமை
இத்தலத்தில் சூல விரதத்தை அனுஷ்டித்த திருமாலானவர் நோய் நீங்கப்பெற்றும், காலநேமி என்ற அசுரனை வெல்லும் வலிமை பெற்றும், சிவனருள் பெற்றார். பரசுராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுக் கார்த்த வீர்யார்ஜுனனை வென்றார். பிரமனும் இங்கு வழிபட்டுத் தனது தீராத வாயிற்று வலி நீங்கப்பெற்றான். சுதன்மன் என்பவன் இவ்விரத மகிமையால், மரணத்தை வென்றான். மேகாங்கன் என்ற மன்னன் கல்வி அறிவில் சிறந்த மக்களைப் பெற்றெடுத்தான். முடிவில் சிவலோகத்தை அடையும் பேறு பெற்றான்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post அனைத்து போகங்களும் கிடைக்க பெற்று பெரு வாழ்வு வாழ appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.