வறுமை போக்கி நிறைந்த செல்வம் அருளும் வைத்தமாநிதிப் பெருமாள்
இறைவன் வைத்தமாநிதிப் பெருமாள், நிட்சயபவித்ரன் போன்ற பெயருடன் அருள்பாலிக்கும் தலம் திருக்கோளூர். குபேரன், மதுரகவி ஆழ்வார் போன்றவர்களுக்கு பிரத்யட்சமாக காட்சி தந்து அருள் செய்தவர். இந்தத் தலத்தில் குபேர தீர்த்தம், தாம்பிரவருணி நதி ஆகியவற்றைத் தீர்த்தங்கள் தல தீர்த்தமாக அமைந்துள்ளன.
ஸ்ரீகர விமானத்தின் கீழ், கிழக்கே தலை சாய்த்து சயனத் திருக்கோலத்தில் இடது கையை உயர்த்தி விரல் நுனிகளைப் பார்ப்பது போல் சேவை சாதிக்கிறார் பெருமாள். கோளூர்வல்லி தாயார் என்ற தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
நம்மாழ்வார் 12 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்த தலம் இதுவாகும். இந்த ஆலயம் கிரகங்களில், மங்கலம் என்று வழங்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு உரியதாக விளங்குகிறது. நம்மாழ்வாரின் சம காலத்தவரும் அவரது நேரிடை சீடருமான மதுர கவியாழ்வார் திரு அவதாரம் செய்த தலம்.
குபேரனுக்கு பெற்ற சாபம்
ஒன்பது வகையான நவ நிதியங்களுக்கும், எண்ணிலடங்கா பெரும் செல்வத்துக்கும் அதிபதியாக திகழ்பவன் குபேரன். அவன் அளகாபுரி என்ற இடத்தில் தனது இருப்பிடத்தை அமைத்து வாழ்ந்து வந்தான். குபேரன் சிறந்த சிவ பக்தன் ஆவான். ஒரு சமயம் மிகுந்த அன்புடனும், பக்தியுடனும் சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் சென்றான்.
அந்த அழகிய பொழுதில் சிவனும் பார்வதியும் குபேரனுக்கு ஒரு சேரக் காட்சி தந்தனர். மிகுந்த பக்திப் பெருக்குடன் சிவனைக் காணச் சென்ற குபேரன், தன் தாய் போன்ற பார்வதி தேவியை தீய எண்ணத்துடன் நோக்கினான். அச்செயலால் மனம் வெறுப்புற்ற பார்வதி தேவி, குபேரன் மீது கடும் கோபம் கொண்டாள். உடன் ஒரு கண்ணை இழக்கவும், அருவருப்பான உருவத்தைப் பெறவும், நவநிதியம் முழுவதும் இழக்கவும் சாபம் இட்டாள். நல்லோர் சாபம் உடனே பலிக்கும் என்பது போல அவை அனைத்தும் உடனே நிகழ்ந்தன.
பொருப்பாளனை இழந்த நவ நிதியங்களும், தாம் தஞ்சம் அடைவதற்கான இடம் தேடின. தன் பக்தர் களுக்கு மரக்காலால் செல்வங்களை வாரி வழங்குபவனும், பொருனை நதிக்கரையில் சயனக் கோலத்தில் துயில் கொள்பவனுமான திருமாலைத் துதித்தன. காக்கும் கடவுளான நாராயணன் அந்நிதியங்களுக்கு புகலிடம் தந்து, அவற்றை அரவணைத்து பள்ளி கொண்டான்.
நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து பாதுகாப்பளித்து அதன் மீது சயனம் கொண்டதால், வைத்த மா நிதியின் மீது சயனம் கொண்டதால் ‘வைத்த மாநிதிப் பெருமாள்’ என்ற பெயர் பெற்றார்.
நிட்சயபவித்ரன் என்றாலும் அதே பொருளாகும். நிதியங்கள் எல்லாம் இங்கு வந்து தீர்த்தத்தில் மூழ்கி தங்களைத் தூய்மைப் படுத்திக்கொண்டதால், இங்குள்ள தீர்த்தத்திற்கு ‘நிதித் தீர்த்தம்’ என்று பெயர் வழங்கப்படலாயிற்று.
குபேரன் பரமசிவனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டான். சிவனோ, பார்வதியிடம் கேட்கச் சொன்னார். உமையவளிடம் தான் செய்த பாவத்தை மன்னிக்குமாறு வேண்டினான். உமையாளோ இட்ட சாபம், என்னால் மீளப் பெற முடியாது. தாமிரபரணி நதிக் கரையில் தர்ம பிசுனத்தலத்தில், உன் நவநிதியங்களும் திருமாலிடம் தஞ்சம் அடைந்துள்ளன. திருமாலும் அதன் மீது சயனித்துள்ளார். நீயும் அத்தலம் சென்று இறைவனை வேண்ட உன் செல்வம் திரும்பக் கிடைக்கும்’ என்றாள் அன்னை பார்வதி.
நிதி பெற்ற குபேரன்
திருக்கோளூர் வந்த குபேரன் வைத்தமாநிதிப் பெருமாள் குறித்து கடும் தவம் மேற்கொண்டான். ஒரு மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் குபேரனுக்கு பெருமாள் காட்சி கொடுத்தார். ‘நீ நிதியங்களுக்குப் பொருப்பாளனாக இருந்தாய். உன் குரூர எண்ணத்தால் அவை உன்னை விட்டு நீங்கின. முழு செல்வமும் உடனே உன்னிடம் தர இயலாது. தரும் செல்வம் கொண்டு பணிகளைத் தொடர்ந்து வா. நீ யார், யாருக்கு இந்த செல்வங்கள் சென்று சேர வேண்டு மென்று விரும்புகின்றாயோ, அவர்களிடம் நானே நேரில் சேர்ப்பேன்’ என்றார்.
திருமால் தந்த பொறுப்பையும், பொருளையும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருப்பிடம் திரும்பினான் குபேரன். அந்த செல்வங்களை ஒரே இடத்தில் நிலைத்து இல்லாமல், எல்லோருக்கும் பரவலாகக் கிடைக்கும் வகையில் அவற்றை லட்சுமிதேவியிடம் பொறுப்பாக ஒப்படைத்தான். குபேரனும், தர்ம குப்தனும் மீண்டும் தங்கள் செல்வங்களைப் பெற்றது போல், மக்களும் தாங்கள் இழந்த செல்வத்தை பெறுவதற்கு, மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் வந்து குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதி பெருமாளை வழிபாடு செய்கின்றனர்.
இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், தானியங்கள் அளக்கும் அளவு மரக்காலைத் தன் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்த்து அடுத்து செய்ய வேண்டியதை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இவ்வூர் மதுரகவி ஆழ்வாரின் அவதாரத் தலம் ஆகும். மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரையே குருவாக தெய்வமாகக் கொண்டவர். அவரின் பாசுரங்கள் கண்ணி நுண் சிறு தாம்பு எனத் தொடங்கும் 11 பாசுரங்களிலும் நம்மாழ்வாரைக் குறித்தே பாடியுள்ளார்.
கோவிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம், அடுத்து பலிபீடம் ஆகியவற்றுடன் மகா மண்டபம், முன் மண்டபம், அர்த்த மண்டபம் அமைந்துள்ளன. கருவறையில், திருக்கோளூர் அண்ணல் கிடந்த கோலத்தில் எல்லோருக்கும் படி அளக்கிறார். தினமும் 5 கால பூஜை நடைபெறும் இத்திருக்கோவிலில் ஒவ்வொரு மங்கள வாரம் எனப்படும் செவ்வாய்க்கிழமை, புதன், வெள்ளி, சனிக்கிழமை பொது மக்களால் வார சிறப்பு நாட்களாகக் கொண்டு வணங்கப்படுகின்றன.
தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post வறுமை போக்கி நிறைந்த செல்வம் அருளும் வைத்தமாநிதிப் பெருமாள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.