கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஞீலிவனநாதர், கதலிவசந்தர், திருப்பைஞ்ஞீலி கோயில்
திருப்பைஞ்ஞீலி கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவனை, ஞீலிவனநாதர், கதலிவசந்தர், ஆரண்ய விடங்கர், நீல கண்டேசுவரர், சோறுடை ஈசுவரர் என்று பல பெயர்களிட்டு அழைத்துப் போற்றுகின்றனர். இறைவி விசாலாட்சி (நீள் நெடுங்கண்ணம்மை) எனப் போற்றப்படுகின்றார்.
இறைவன் அளித்த கட்டமுது:
திருநாவுக்கரசர் பெருமானுக்கு இறைவனே கட்டமுது தந்தது இறைவனின் எல்லையில்லா கருணைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. காவிரிக்கரையில் பல திருத்தலங்களை தரிசித்துவிட்டு, அப்பர் பெருமான் திருப்பைஞ்ஞீலி திருத்தலத்திற்கு வருகிறார். நடந்துவந்த களைப்பு சோர்வு தனது அடியார்க்கு ஏற்பட்ட சோர்வினை போக்க இறைவனே சோலையை உண்டாக்கி, தாகம் தணிக்க நீர் நிலையும் அமைத்து கட்டமுதும் அளித்து பசியைப் போக்கிய சிறப்பானத்தலம்.
“ஆடல் புரிந்தார் அடியேனைப் பொருளா அளித்த கருணை எனப் பாடல் புரிந்து விழுந்தெழுந்து கண்ணீர் மாரி பயில்வித்தார்‘ எனப் பெரிய புராணம் போற்றுகிறது. சித்திரை மாதத்தில் அப்பர் கட்டமுது விழா சிறப்பாக இத்திருக்கோயிலில் நடைபெற்று வருகிறது.
திருக்கோயில் அமைப்பு:
கிழக்கு நோக்கிய திருக்கோயில். கோயிலின் ராஜ கோபுரம் முழுமை அடையாவிட்டாலும், பாண்டிய மன்னர் கலைப் பாணியுடன் அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் காட்சி தருகிறது. நுழையும் வழியில் பக்கச் சுவர்களில் பைரவர், அதிகார நந்தி ஆகிய இறைவடிவங்கள் காட்சி தருகின்றன.
இத்தலத்து இறைவனை திருமால், இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயுபகவான், அக்கினி, சூதமாமுனிவர் ஆகியோர் வழிபட்டதாக புராண வதலாறு கூறுகிறது. இராஜ கோபுரத்தை அடுத்து இடது பக்கம் ஒரு மரத்தின் கீழ் சூதகமகா முனிவர் வடிவினைக் கண்டு வழிபடலாம்.
எமன் பயம் போக்கும் திருப்பைஞ்ஞீலி:
தெற்குத் திருச்சுற்றில் பாறையை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக் கோயிலில் சிவபெருமானின் சோமாஸ்கந்தர் வடிவத்தைக் கண்டு வழிபடலாம். இறைவனுக்கு வலது பக்கம் தேவி அமர்ந்திருப்பது சிறப்பானது. இறைவன் – இறைவிக்கு நடுவே (கந்தன்) முருகன் அமர்ந்திருக்கும் கோலம் மிக அழகாய் விளங்குகிறது. இறைவனது காலின் கீழ் முயலகன் வடிவம் காணப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் எமதர்மனுக்கு உயிர் அளித்தார்.
திருப்பைஞ்ஞீலி கோயிலிலுள்ள இறைவனை, எமதர்மனுக்கு உயிர் கொடுத்த அதிகாரவல்லவர் எனக் கூறுகின்றனர். மரணப் படுக்கையில் அவதிப் படுபவர்களுக்கு இக்கோயிலில் வழிபாடு செய்தும், கோயிலின் அருகே உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தையும் சிறிது பருக தந்தால் வேதனையின்றி உயிர் பிரியும் எனக் கூறி சிறப்பான வழிபாடுகளை பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.
அற்புத நவக்கிரகங்கள்:
மூன்றாம் திருச்சுற்றிலிருந்து கோயிலினுள் செல்லும் முன் சிறிய கோபுரம் உள்ளது. இதனைக் கடந்து வந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தியை வழிபட்டவுடன் ஒன்பது குழிகளில் தீபம் ஏற்றப்பட்டுள்ளதைக் காணலாம். இதுவே நவக்கிரகம் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை.
நவக்கிரகத் சூரியன் வழிபடும் ஞீலிவனநாதர்:
சுயம்பு மூர்த்தியான இறைவன் ஞீலிவனநாதர் ஆரணீய விடங்கர் எனப் போற்றப்படுகின்றார். புரட்டாசி மாதத்தில் 6, 7, 8 தேதிகளிலும், பங்குனி மாதத்தல் 6, 7, 8 தேதிகளிலும் சூரியனது ஒளி இறைவன் மீது படும் அற்புதக்காட்சியைக் கண்டு வழிபடலாம்.
இரத்தின சபை மேலச்சிதம்பரம்:
கருவறைக்கு முன் உள்ள மண்டபத்தில் சக்திவாய்ந்த இரத்தின சபை உள்ளது. நடராஜர் திருமேனி இல்லாமல், திருவடி படிந்த பீடம், இங்கே வழிபடப் பெறுகிறது. வியாக்கிரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் தில்லை கனகசபையில் ஆடவல்லானின் நடனத்தைக் கண்டு தரிசனம் செய்தனர். இதனைக் கேள்விபட்ட வசிட்ட முனிவர் சிதம்பரம் சென்று நடன தரிசனத்தைக் காண இறைவனிடம் இறைஞ்சினார். ஞீலி வனமாகிய திருப்பைஞ்ஞீலியில் இன்னோரு நடனம் செய்வோம் என்று கூறி நடன தரிசனம் காட்டிய தலம் இது. எனவே இத்தலம் மேலச்சிதம்பரம் எனச் சிறப்பாகப் போற்றி அழைக்கப்படும் பெருமை உடையது.
வரலாற்றுச் சிறப்பு:
இக்கோயிலில் காணப்படும் 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றன. முதலாம் ராஜேந்திரசோழன், ராஜாதிராஜன், விக்கிரமசோழன், இரண்டாம் ராஜராஜன், இரண்டாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜன், ஆகிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகளும், பாண்டிய விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரின் திருஉருவங்கள் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றதை அறிய முடிகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இக்கோயிலில் சிறப்பான வழிபாடு தொடர்ந்து நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
இக்கோயிலில் சித்திரை மாதத்தில் திருத்தேர், அப்பர் கட்டமுது விழா மற்றும் நவராத்திரிவிழா, சூரசம்ஹாரம், பிட்டுக்கு மண் சுமந்த விழா, தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
“பைஞ்ஞீலியார் சடையிற்கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே’ என்று நாவுக்கரசர் பெருமான் இத்தலத்து இறைவனைப் போற்றுகின்றார்.
“பழியிலார் பரவு பைஞ்ஞீலி’ என்று இத்தலத்து சிறப்பினை ஞானசம்பந்தர் பெருமான் போற்றுவதைக் காணலாம்.
சுந்தரர் பெருமான் இத்தலத்து இறைவனை “ஆரணீயவிடங்கர்’ எனப் போற்றுகின்றார்.
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் போற்றப்பட்ட திருத்தலம் இது. திருப்பைஞ்ஞீலி திருக்கோயில் திருச்சிராப்பள்ளியிலிருந்து மணச்சநல்லூர் வழியாக முசிறி செல்லும் பாதையில் 20 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஞீலிவனநாதர், கதலிவசந்தர், திருப்பைஞ்ஞீலி கோயில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.