பரம சௌக்கியம் உண்டாகும் சந்திர மௌலீஸ்வரர் கோயில்
எத்தனையோ தலங்களில் சிவலிங்கத் திருமேனி புதைந்து கிடப்பதை அறிந்து அங்கெல்லாம் கோயில் எழுப்பும்படி காஞ்சி பரமாச்சார்யார் உத்தரவிட்ட சம்பவங்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். தான் உறைந்திருக்கம் விஷயத்தை அந்த இறைவனே பரமாசார்யாளுக்கு உணர்த்திய வித்தியாசமான தலம் உன்னதபுரம்.
ஒரு சமயம் காஞ்சி மகா பெரியவர் தெய்வ தரிசனம் செய்ய ஒவ்வொரு தலமாக வந்தபோது உன்னதபுரம் என்ற ஊரி்ல் ஒரு இரவு தங்கினார். அப்போது அவர் கனவில் இறைவன் ஆதிசங்கரர் வடிவில் தோன்றினார். சந்திரமௌலீஸ்வரராக யாம் அருளாட்சி புரிய இத்தலத்தில் ஓர் ஆலயம் எழுப்புக என கூறிவிட்டு மறைந்தார்.
அதன்படி காஞ்சி மகா பெரியவர் இத்தலத்திலேயே தங்கி ஊர் மக்கள் உதவியுடன் கோயில் ஒன்றை கட்டி குடமுழுக்கினையும் நடத்தி வைத்தார். இறைவனே கூறியதை அடுத்து அவரது திருப்பெயர் சந்திர மௌலீஸ்வரர் என்றும் இறைவிக்கு ஆனந்த வல்லி என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. உன்னதபுரம் தலத்தின் தற்போதைய பெயர் மேலையூர்.
கிழக்குநோக்கி அமைந்துள்ளது ஆலயம். முகப்பில் மூன்றடுக்கு ராஜகோபுரம் கம்பீரமாக நிற்க உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம் உள்ளது. எதிரே நந்தி தேவர் தனி மண்டபத்தில் ஆட்சி செய்ய அவரை கடந்தால் மகா மண்டபம் நடுவே நந்தியும் பலி பீடமும் அடுத்துள்ள அர்த்த மண்டப வாயிலின் இடதுபுறம் விநாயகரும் வலது புறம் தண்டாயுதபாணியும் அருள்கின்றனர். அண்ணன், தம்பியை வணங்கிவிட்டு நிமிர்ந்தால் எதிரே கருவறையில் இறைவன் சந்திர மௌலீஸ்வரர் லிங்கதிருமேனியராக தரிசனம் அளிப்பதை காணலாம்.
மகா மண்டபத்தின் வலதுபுறம் இறைவி ஆனந்தவல்லி நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் புன்னகை தவழ நாள் எல்லாம் பார்த்து கொண்டே இருக்கலாம் அத்தனை அழகு. அன்னை தென்திசை நோக்கி நின்றிருக்க அன்னையில் மேல் வலது கரத்தில் உத்திராட்ச மாலையும், இடது மேல்கரத்தில் பத்மமும், கீழ் வலது கரத்தில் அபய முத்திரையும், கீழ் இடது கரத்தில் வரத ஹஸ்த முத்திரைகளும் காட்சி தருகின்றன.
இறைவனின் தேவகோட்டத்தின் தென் திசையில் தெட்சிணாமூர்த்தியும் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றில் பிள்ளையார், விசாலாட்சி, விஸ்வநாதர், முருகன், வள்ளி, தெய்வானை, சுந்தரேஸ்வரர், மீனாட்சிநாதர், கஜலட்சுமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வடக்கு பிராகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னதியும், வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர் சன்னதியும் உள்ளன.
கிழக்கு பிரகாரத்தில் சனிபகவான், சூரியன் பைரவர் சன்னதிகள் உள்ளன. இந்த ஆலயத்தில் அனைத்தும் இறைவியே என அனைவரும் உணர வேண்டும் என்பதால் இங்கு துர்க்கை பிரதிஷ்டை செய்யப்படவில்லை. பாரமாசார்யாளே கட்டிய கோயில் என்பதால் இங்கே வந்து வணங்குவோர் வாழ்வில் பரம சௌக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.
தினசரி இரண்டு கால ஆராதனை நடக்கும். இந்த ஆலயத்தில் சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, புத்தாண்டு, ஆடி வௌ்ளிகள், தை வௌ்ளிகள், சோமவாரம், கார்த்திகை போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாத அன்னாபிஷேகம் காணவும், பிரதோஷ நாட்களிலும் பல நூறு பக்தர்கள் ஆலயம் வந்து பயன் பெறுகின்றனர்.
சந்திர தோஷம் போக்கும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. சந்திரதோஷம் உள்ளவர்கள் ஆராதனை செய்து வணங்கி வெண் பொங்கல் படைத்து, அதனை பக்தர்களுக்கு வினியோகம் செய்தால் தோஷம் விலகும்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post பரம சௌக்கியம் உண்டாகும் சந்திர மௌலீஸ்வரர் கோயில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.