துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருக்கும் ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கரம் விழா
ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம்
காவிரித்தாய் இரண்டாகப் பிரிந்து திருவரங்கப் பெருமானை அரவணைத்துச் செல்லும் திருவரங்கத் திருத்தலத்திலும் காவிரி மகா புஷ்கரப் பெருவிழா நடைபெறவுள்ளது.
மழை வளம் பெருகவும், மண் வளம் சிறக்கவும், மனிதர்களின் துன்பங்கள் நீங்கி எங்கெங்கும் மகிழ்ச்சி பெருகவும் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமி அனுக்கிரகத்துடன் ஸ்ரீஸ்ரீஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமந்நாராயண ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகள் அருளாசியோடு ஒரு புனித பிரம்ம யக்ஞமாகத் திருவரங்கத்தில் நடைபெறவுள்ளது காவிரி புஷ்கரம். வரும் செப்டம்பர் 12 முதல் 23-ம் தேதி வரையிலும் வேத பாராயணம், திவ்விய பிரபந்த, இதிகாச, புராண பாராயணங்களுடனும், பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறச் செய்யும் யாகங்களும் நடைபெற இருக்கின்றன. மேலும், ஸ்ரீவைஷ்ணவ மடங்களைச் சேர்ந்த ஜீயர் ஸ்வாமிகளும், சாதுக்களும், ஆசார்ய புருஷர்களும் கலந்துகொண்டு அருளாசி வழங்க உள்ளார்கள். பக்தர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு இறையருள் பெற்றுச் செல்லலாம்.
தென்மாநில கும்பமேளா எனப்படும் காவிரி மகா புஷ்கரம் விழா இன்று (12ம் தேதி) தொடங்கி 12 நாட்களுக்கு காவிரி பாயும் பகுதிகளில் கொண்டாடப்படவுள்ளது. கங்கை, நர்மதா, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பிரம்மபுத்திரா, துங்கபத்ரா, சிந்து, பரணீதா ஆகிய 12 நதிகள் புனிதத்துவம் கொண்டவையாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
நதிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலத்தில் புஷ்கரம் என்ற பெயரில் புனிதமடைவதாக ஐதீகம். குருபகவான் சஞ்சாரத்தின் அடிப்படையில் நதிகளுக்கு புஷ்கரம் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. புஷ்கரம் விழா நடைபெறும் நாட்களில் அந்த குறிப்பிட்ட நதியில் நீராடுவது அனைத்து புண்ணிய நதிகளிலும் பலமுறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக துலாம் ராசிக்கும் காவிரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே துலாம் ராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் காவிரியில் புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது.
இன்று (12ம் தேதி) குருபகவான் துலா ராசியில் பிரவேசிக்கிறார். எனவே இன்றிலிருந்து 12 நாட்களுக்கு காவிரி புஷ்கர விழா கொண்டாடப்படுகிறது. பின்னர் அங்கு ஐதராபாத் ரமாகாந்தாச்சாரி தலைமையில் 50க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் தினமும் காலை, மாலை இருவேளையும் பல்வகை யாகங்கள் நடத்தவுள்ளனர். தினமும் மாலை 6 மணிக்கு காவிரி தாய்க்கு மங்கள ஆரத்தி சமர்ப்பிக்கப்படவுள்ளது. 12 நாட்களும் ஜீயர்கள் மற்றும் மகான்களின் ஆசியுரைகளும், பல்சுவை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. இந்நிகழ்ச்சியில் நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முக்கிய வைணவ மடாதிபதிகள், ஜீயர்கள் கலந்து கொள்கின்றனர்.
12 ராசிகளும் நதிகளும் குருபகவான் மேஷ ராசியில் இருக்கும்போது கங்கையிலும், ரிஷபத்தில் இருக்கும்போது நர்மதையிலும், மிதுனத்தில் இருக்கும்போது சரஸ்வதியிலும், கடகத்தில் இருக்கும்போது யமுனையிலும், சிம்மத்தில் இருக்கும்போது கோதாவரியிலும், கன்னியில் இருக்கும்போது கிருஷ்ணாவிலும், துலாமில் இருக்கும்போது காவிரியிலும், விருச்சிகத்தில் இருக்கும்போது தாமிரபரணியிலும், தனுசுவில் இருக்கும்போது சிந்துவிலும், மகரத்தில் இருக்கும்போது துங்கபத்ராவிலும், கும்பத்தில் இருக்கும்போது பிரம்மபுத்ராவிலும், மீனத்தில் இருக்கும்போது கோதாவரி நதியின் உபநதியான பரணீதாவிலும் புஷ்கரமானவர் இருந்து அருள்பாலிக்கிறார்.
காவிரியில் புஷ்கரம் விழா
குரு பகவான் கன்னியிலிருந்து துலாம் ராசிக்கு இடம்பெயரும்போது, துலாமுக்கு உரிய காவிரி நதியில் வாசம் செய்வார் என்பது நம்பிக்கை. காவிரியில் இந்த புஷ்கரம் 144 வருடங்களுக்கு ஒருமுறை வருவதால், செப்டம்பர் 12 முதல் 24ம் தேதி வரை காவிரி மகா புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.
புனித நீராடியதன் பலன்
புனித நீராடியதன் பலன் புஷ்கர புண்ணிய காலத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள் போன்றோர் நதிகளில் வாசம் செய்வதால், இந்த புண்ணிய காலங்களில் நதியில் நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் புனித நீராடிய பலன் கிடைக்கும். அன்னதானம், வஸ்திரதானம் போன்ற பல தானங்கள் செய்தால் பன்மடங்கு பலனை தந்து நம்மை மோட்சத்திற்கு போக வழி வகுக்கும். புஷ்கர புண்ணிய காலத்தில் நீராடி பிதுர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்வதால் பிதுர்சாபம் நீங்கி நல்வாழ்க்கை வாழ வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருக்கும் ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.