கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருத்தெற்றியம்பலம்
சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த்
திருத்தெற்றியம்பலத்தென் செங்கண் மாலை
கூரணிந்த வேல்வலவன் ஆலிநாடன்
கொடிமாட மங்கையர்கோன் குறையலாளி
பாரணிந்த தொல்புகழோன் கலியன் சொன்ன
பாமாலை யிவையைந்து மைந்தும் வல்லார்
சீரணிந்த வுலகத்து மன்னராகிச்
சேண் விசும்பில் வானவராய்த் திகழ்வார் தாமே.
-திருமங்கையாழ்வார்
வைணவர்களின் 108 திவ்யதேசங்களிலும் அம்பலம் என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரே திருத்தலமான இது, சீர்காழிக்குச் சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள திருநாங்கூர் திருஷேத்திரத்தில் அமைந்துள்ள திவ்யதேசங்களுள் ஒன்றாகும். சோழதிருப்பதிகளுள் இது முப்பத்து ஏழாவதாகும்.
தலபுராணம்
பூமியைக் களவாடி பாதாள உலகம் சென்றுவிட்ட அசுரன் இரண்யாட்சனிடம் இருந்து அதை மீட்க எம்பெருமான் வராஹ அவதாரம் எடுக்க முனைகையில், அவரது மார்பில் உறைபவளான அலைமகளும், அணுப்போதும் அவரை விட்டு நீங்காத ஆதிசேஷனும் கலக்கமுற, அவர்களை சாந்தப்படுத்தும் விதமாக சர்வேசன் இரண்யாட்ச வதம் முடித்தபின் தாம் பலாசவனம் என்னும் திருத்தலத்தில் பிரத்யட்சமாவேன் என்றும் அதுவரை அங்கு தவமிருக்குமாறும் கூற, அவ்வாறே அங்கு அவர்களும் தவமிருக்க, சொன்ன வண்ணம் செய்பவன் என்று பேர் பெற்ற பெருமாள் அவ்வண்ணமே இங்கு வந்து தோன்றினார் என்பது இத்தல புராணம். பலாசவனம் என்பது தற்போது கலியுகத்தில் திருத்தெற்றியம்பலம் என்று வழங்கப்படுகிறது.
சினத்தோடு போர் புரிந்திருந்த காரணத்தால் சிவந்த கண்களைக் கொண்டிருந்தமையால் செங்கண்மால் என்று வழங்கப்பட்டார். கடும் சமர் புரிந்த களைப்பின் காரணமாக பள்ளி கொண்டு, பள்ளி கொண்ட ரங்கநாதருமானார். தாயாரின் திருப்பெயர் செங்கமலவல்லி என்பதாகும். தன் ஒளியும், உஷ்ணமும் குறையக் கண்ட ஆதவன் இங்கு வந்து நீராடி மீண்டும் தன் சோபை பெற்றான் என்பர். இத்தலத் திருக்குளம் சூரிய புஷ்கரணி எனப்படுகிறது.
தலச் சிறப்பு
பதவியில் சிறப்படைய இயலாதவர்கள், முன்பிருந்த நிலையில் தாழ்ந்து விட்டோம் என்று எண்ணுபவர்கள் இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி பெருமானைச் சேவித்தால் தங்கள் நிலை உயரக் காண்பர். புத்திர பாக்கியம் அளிக்கும் திருத்தலமாகவும் இது கருதப்படுகிறது. நோய், தனிமை போன்றவற்றால் வாடும் முதியவர்களுக்கு இது மனச்சாந்தி அளிக்கும் திருக்கோயிலாகும்.
கங்கு கரையின்றி காதல் பெருகவுளம்
எங்கும் நிறைந்திருக்கும் எம்பிரான் பள்ளிகொண்ட
செங்கண்கொள் மாலனையே சேவித் திருதினமே
தங்கு தடைகள் தகர்.
ஓம் நமோ நாராயணா!
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருத்தெற்றியம்பலம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.