அஷ்ட ஐஸ்வர்யங்களையும் லட்சுமிகடாச்சமும் பெறுக
ஆனந்தர், கர்தமர், ஸிக்லீதர் போன்றோர் இந்த மகாலட்சுமி மந்திரத்தின் ரிஷிகளாவர். அக்னி பகவான் தேவதை. ஹிரண்யவர்ணம் என்பது பீஜம். காம்ஸோஸ்மிதாம் சக்தியாக கருதப்படுகிறது. அனுக்ரகம் ஏற்பட்டால் அழியா செல்வம், பெரியோர்களிடமும் விஷ்ணுவிடமும் பக்தி, சத்சந்தானம், நற்புகழ், தனதான்ய, ஐஸ்வர்ய அபிவிருத்தி போன்றவை மென்மேலும் விருத்தியாகும். புகழுடன் பொலிவும் கூடும். பரம்பொருளாம் நாராயணனின் திருமார்பில் உறையும் இவள், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தன்னை உபாசிப்பவர்களுக்கு அருள்கிறாள். திருமால் ராமனாக வந்தபோது சீதையாகவும் கண்ணனாய் வந்தபோது ருக்மணியாகவும் ஸ்ரீநிவாஸனாய் வந்தபோது பத்மாவதியாகவும் அவதரித்தவள் திருமகளே.
வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும் அரசர்களிடம் ராஜ்யலட்சுமியாகவும் குடும்பங்களில் க்ரஹலட்சுமியாகவும் அழகுள்ளவர்களிடம் சௌந்தர்ய லட்சுமியாகவும் புண்யாத்மாக்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் க்ஷத்ரிய குலங்களில் கீர்த்திலட்சுமியாகவும் வியாபாரிகளிடம் வர்த்தக லட்சுமியாகவும் வேதங்கள் ஓதுவோரிடம் தயாலட்சுமியாகவும் பொலிபவள் இவளே.
பசுவின் தேகத்தில் தேவர்கள் அனைவரும் தங்க இடம் பெற்றனர். அனைத்து இடங்களிலும் அனைவரும் இடம் பெற்ற நிலையில் தாமதமாக வந்தாள் திருமகள். கோமாதாவிடம் ‘‘எனக்கும் உன் பவித்திரமான தேகத்தில் இடம் தரக்கூடாதா?’’ எனக் கேட்டாள். அனைவரும் இடம்பெறாத இடம் தன் பிருஷ்ட பாகம். அதை எப்படி ஸ்ரீதேவிக்கு அளிப்பது எனத் தயங்கிய பசுவிடம் லட்சுமி, ‘‘உன் தேகம் முழுதுமே பவித்ரம். அதனால் உன்பின்பக்கமாகிய பிருஷ்ட பாகத்திலேயே நான் தங்குகிறேன்’’ எனக்கூறி அங்கே இடமும் பிடித்தாள். அதனால் அங்கிருந்து வரும் கோமியம், பசுஞ்சாணம் போன்றவை புனிதமாகிறது. பசுஞ்சாணியில் திருமகள் வாசம் செய்வதை ‘கரீஷிணிம்’ எனும் சொல் குறிக்கிறது.
கோமயத்தைக் கொண்டு மெழுகப்பட்ட இடம் பவித்ரமானதும் லட்சுமி கடாட்சம் பெற்றதாகவும் ஆகிவிடுகிறது. திருமகளை வரவேற்கவென்றே சில வீடுகளில் காலையில் வாசலில் பசுஞ்சாணம் தெளித்துக் கோலமிடுகின்றனர். குளிர்ந்த ஒளியைத் தரும் சந்திரன் போன்று பிரகாசிப்பவள். கீர்த்தியுடையவள். தேவர்களால் துதிக்கப்படுபவள். பஞ்ச பூதங்களுக்கும் ஈஸ்வரி என்பதை ‘ஈம்’ பீஜம் குறிக்கிறது. இந்த மகாலட்சுமியைச் சரணடைந்தால் அமங்கலங்களும் அலக்ஷ்மியும் அகலும் என ஸ்ரீஸூக்தம் உறுதியாகக் கூறுகிறது. மகாலட்சுமி நிலைத்திருக்க தினமும் ஸ்ரீஸூக்த ஜபம் செய்யவேண்டும். உண்மையே பேச வேண்டும். தனியாக உப்பையும் வெறும் பாக்கையும் மெல்லக்கூடாது. அழுக்கு ஆடைகள் அணியக்கூடாது.
திருமாலின் தசாவதாரங்களில் பெரும்பாலும் மகாலட்சுமி உடன் இருந்து அருள் புரிந்ததை புராணங்கள் வாயிலாக அறிய முடிகிறது. கூர்மவதாரம் எடுத்து மேருமலையைத் தாங்கிய போது பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு திருமாலை மணந்தாள் லட்சுமி. வராக அவதாரத்தின் போது அவருடன் இணைந்து வராகரை, லட்சுமி வராகராக்கியவள். நரசிம்மரின் கோபத்தைத் தணிக்க அவர் மடியில் அமர்ந்து அவரை சாந்தப்படுத்தி லட்சுமி நரசிம்மராக்கியவள். வாமன அவதாரத்தில் பெருமாள் பிரம்மச்சாரியாக உருமாறியபோதிலும் அவர் திருமார்பில் ‘அகலகில்லேன்’ என்று உறையும் திருமகளை மறைக்க தன் திருமார்பை மான் தோலால் திருமால் மறைத்ததாகக் கூறுவர். பரசுராம அவதாரம் பிரம்மச்சாரி.
ராமவதாரத்தில் திருமகளே சீதையானாள். கிருஷ்ணாவதாரத்தில் லட்சுமியே ருக்மிணியானாள். பலராம அவதாரத்தில் திருமகளே ரேவதி எனும் பெயரில் அவரை மணந்தாள்.
வரலட்சுமி விரதம், வெள்ளிக்கிழமை விரதம், வைபவலட்சுமி விரத, கோபூஜை, அட்சய திருதியை பூஜை போன்றவை திருமகளுக்குரிய விரதங்களாகக் கருதப்படுகின்றன. தங்கத்தில் திருமகள் உறைகிறாள். அதனாலேயே மங்களகரமான திருமாங்கல்யம் தங்கத்தில் செய்யப்படுகிறது. திருமகள் உறையும்
மஞ்சள் மங்கலமான பொருள். சௌபாக்ய லட்சுமி மஞ்சளில் வாசம் செய்வதால் மஞ்சள் பூசிக் குளித்த பெண்கள் லட்சுமிகரமாகத் தோற்றமளிக்கின்றனர் என்கிறோம். சுமங்கலிகளின் வகிட்டில் திருமகள் உறைவதாக ஐதீகம். எனவே சுமங்கலிப் பெண்கள் வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். பூஜைகளின்போது நிவேதிக்கப்படும். தாம்பூலத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். மேலும், ஸ்வஸ்திக் சின்னம், வெண் சாமரம், பூரணகும்பம், அடுக்கு தீபம், ரிஷபம், வலம்புரிச் சங்கு, ஸ்ரீவத்ஸம், குடை போன்ற எட்டு பொருட்களிலும் திருமகள் உறைவதால் இவை அஷ்டமங்கலப் பொருட்கள் என போற்றப்படுகின்றன.
பால், தேன், தாமரை, தானியக் கதிர்கள், நாணயங்கள் ஆகிய ஐந்திலும் திருமகள் வாசம் செய்வதால் இவற்றை பஞ்சலட்சுமிகள் என்பர். பாலை குழந்தைகளுக்கும் தேனை பெண்களுக்கும் தாமரையை ஆலயங்களில் அர்ச்சனைக்கும் நாணயங்களை ஆடவர்க்கும் தானியக் கதிர்களை பறவைகளுக்கும் தானமாகத் தர திருமகள் திருவருள் சித்திக்கும். வில்வம், தாமரை, வெற்றிலை, நெல்லி, துளசி மாவிலை போன்றவை திருமகள் அருள் பெற்ற தெய்வீக மூலிகைகளாக கருதப்படுகின்றன. பாற்கடலில் இருந்து தோன்றியதால் உப்பும் திருமகள் வடிவமாகவே கருதப்படுகிறது. இன்றும் முதல் தேதியன்று முதன் முதலில் கல் உப்பு வாங்கினால் திருமகள் அருள் கிட்டும் எனும் நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.
ஸௌந்தர்யலக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, மேதா லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, துஷ்டி லக்ஷ்மி, புஷ்டி லக்ஷ்மி, ஞான லக்ஷ்மி, சாந்தி லக்ஷ்மி, சாம்ராஜ்ய லக்ஷ்மி, ஆரோக்ய லக்ஷ்மி. அன்ன லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி, நாக லக்ஷ்மி, கிருஹ லக்ஷ்மி, மோட்ச லக்ஷ்மி என அனைத்தும் மஹாலக்ஷ்மியின் திருவடிவங்களே.
பத்மவனத்தில் வசிப்பதால், பத்மத்தில் பிரியம் கொண்ட யானைகளின் நாதத்தினாலே உணரப்படுபவள் இத்தேவி. தன் தாமரை ஆசனத்தில் குல்குலு, தமகன், குரண்டகன், சலன் போன்ற நான்கு யானைகளின் முழக்கத்திலே மகிழ்ந்து கொலுவிருப்பவள். இந்த நான்கு யானைகளும் பக்தர்களுக்கு தர்மம், காமம், அர்த்தம், மோட்சம் எனும் நான்கையும் அருள வல்ல தேவி நமக்கு எல்லா செல்வங்களையும் வளரச் செய்யட்டும்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post அஷ்ட ஐஸ்வர்யங்களையும் லட்சுமிகடாச்சமும் பெறுக appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.