பட்டுக் கோலவிழி அம்மன் கோயில் நவராத்திரி விழா
கோலவிழியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள தலமாகும். இது மிகவும் சக்திவாய்ந்த கோயில் என்று நம்பப்படுகிறது. இந்த கோயிலில் வீற்றியிருக்கும் அம்மனுக்கு காணிக்கையாக சாக்லேட் தருகிறார்கள் பக்தர்கள்.
பட்டுக் கோலவிழி அம்மன் கோயில் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது. முண்டகக்கன்னியம்மன் கோயிலிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். நோய் தீர்க்கும் வேண்டுபவர்களுக்கு நோய் தீர்க்கும் அற்புத சக்தி கொண்ட அம்மன்.
பச்சை பட்டு கோலவிழியம்மன், அபர்ண காளியம்மன், ஆனந்த கோலவிழியம்மன், மங்கள காளியம்மன், பிள்ளையார், முருகன், ஐயப்பன், தட்சினாமூர்த்தி, கைலாச கபாலி, கிருஷ்ணன், சூரியநாராயணர் மற்றும் பாலாஜி ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள கோலவிழி அம்மன் என்னும் பத்ரகாளி திருக் கோவிலாகும். இந்த முதல் மரியாதைக்குக் காரணம், இது கபாலீஸ்வரர் திருக்கோவிலின் துணைக் கோவில் என்பது மட்டுமல்ல; மயிலாப்பூர் நகரின் எல்லைகளைக் காத்தருளும் காவல் தெய்வமாக இத்தல அம்மன் விளங்குகின்றாள் என்பதே முதன்மையான காரணம்.
கோலவிழி அம்மன்
அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோல விழி அம்மனாக விளங்குகிறாள். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது எண் கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது எண் கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும்.
‘பத்ர’ என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் கருணை அருளும் நாயகி, கோலவிழி அம்மன் என்றால் அது மிகையல்ல.
விழாக்கள்
சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10–ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும். இந்து சமய அறநிலையத்துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இத்தகைய சிறப்புமிகு ஆலயத்தின் நவராத்திரி விழா வருகிற 19.09.2017 தேதி முதல் 30.09.2017 வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
அமைவிடம்
சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதேபோல, கபாலீசுவரர் திருக்கோவிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்..
இங்ஙனம்
திருமதி மாலதி
ஸ்தாபகர் மேனேஜிங் டிரஸ்ட்
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post பட்டுக் கோலவிழி அம்மன் கோயில் நவராத்திரி விழா appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.