செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்குவால் பூஜித்து வரப்பட்ட பெருமைக்குரியது சிங்கவரம் அருள்மிகு ரங்கநாதப் பெருமாள் கோயில். மலைகளால் சூழப்பட்ட இயற்கை எழிலோடு காணப்படும் சிங்கவரம் கிராமத்தில் குடைவரக்கோயிலாக இது அமைக்கப்பட்டது.
வடரெங்கம் என ஆன்றோர்களால் புகழப்படும் இத்திருத்தலம் கோயில், கருவறை, பெருமாள் இவை அனைத்தும் ஒரே பாறையில் குடையப் பெற்ற சிறப்பினை உடையது. ஆதிசேடனின் சுருண்ட படுக்கையின் மேல் இந்தப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார். 24 அடிகளைக் கொண்ட பெருமாளின் திருவுருவம் கண்கொள்ளாக் காட்சியாகும்.
பிரம்மாண்டமான இப்பெருமானின் நாமிக் கமலத்தில் பிரம்மா, மார்பிலே மகாலட்சுமி, பிரம்மா அருகில் கருடன் மற்றும் மதுனகடபர்கள், பெருமாளின் பாதத் திருவடிகளைத் தாங்குகிறாற்போல் பூமாதேவி… இத்தனை திருக்கோலங்களையும் ஒரே குடைவரையில் வடித்த சிற்பிகளின் திறமை மிகவும் பாராட்டத்தக்கது.
கல்லெல்லாம் சிலை வடித்த பல்லவ மன்னன் மகேந்திர வர்மாவால் கி.பி. 620ல் குடைவரை உருவாக்கப்பட்டு இருக்கலாமென ஒரு சாராரும், நரசிம்ம வர்ம பல்லவன் காலத்திலேயே உருவாக்கப்பட்தென மறுசாராரும் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
சிங்கவரத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளைப் போன்றே புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் என்ற இடத்திலும் ரங்கநாதப் பெருமாள் குடைவரைக் கோயில் உள்ளது.
பல்லவர்களால் அமைக்கப்பட்ட இந்த இரண்டு குடைவரை சயனபெருமாளில் சிங்கவரம் பெருமாளே திருவுருவத்தால் மிகப்பெரிய பெருமாள் ஆவார்.
எட்டு வகை சயனத் திருக்கோலங்களில் ஒன்றான போகநிலைச் சயனத்தில் இருக்கும் இந்த ரெங்கனை, ஒரே இடத்தில் நின்றவண்ணம் தரிசிக்க முடியாது.
பெருமாளின் திருமுகம், திருவுடல் மற்றும் திருப்பாதங்கள் எனத் தனித்தனியாக மட்டுமே தரிசிக்க முடியும். ஆனால் இக்கோயிலில் திருமுகம், திருவுடல் மற்றும் திருப்பாதங்கள் என மூன்று வாயில்களில் ஒரே இடத்தில் இவ்வளவு பெரிய திருமேனி உடைய பெருமாள் இந்தியாவில் வேறெங்குமில்லை. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள பெருமாள் மிகவும் கீர்த்திவாய்ந்த பெருமாள். இந்தப் பெருமாளிடம் அளவற்ற பக்தி கொண்டவனாக தேசிங்குராஜன் இருந்திருக்கிறான்.
ரங்கநாதப் பெருமானின் கீர்த்தி பெற்றவன் என்பதால், பல சிற்றரசர்களால் அடக்க முடியாத தில்லிபாதுஷாவின் முரட்டுக் குதிரையை அடக்கி பாதுஷாவினால் சிறைப்பிடிக்கப்பட்ட தந்தையையும் மீட்டு வந்தான்.
கி.பி. 1797ல் ஆற்காடு நவாப் சாதுல்லாகானை எதிர்த்துப் போரிடச் செல்வதற்கு முன் ராஜாதேசிங்கு பெருமாளைத் தரிசிக்க சென்றான். “வெள்ளிக்கிழமையான இன்று போருக்குச் செல்ல வேண்டாம். பின்னொருநாள் செல்” – எனப் பெருமாளே தேசிங்கிடம் பேசியதாக ஐதீகம். பெருமாளின் அருள்வாக்கை மீறி சென்றதால் சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் தேசிங்கு போரில் வீரமணம் அடைந்தார் என்பதும் வரலாற்று உண்மை.
திருக்கோயிலின் பாதாள அறையில் விஷ்ணு துர்க்கை அருள் பாலிக்கிறார். திருக்கோயில் குடையப்பெற்றுள்ள அதே பாறையில் வடிவமைக்கப்பட்டது இந்தத் துர்க்கை என்பது மிகவும் வியக்கத்தக்கது.
சங்கு, சக்கரம் ஏந்திய துர்க்கையாக ‘மகிஷா சூரமர்த்தினி’ காணக்கிடைப்பது வேறெங்குமின்றி இத்திருத்தலத்தில் உள்ள தனிச்சிறப்பு. குடைவரையட்டி மணிமண்டபம், ராஜகோபுரம், திருக்குளம் மற்றும் தாயார் சந்நிதிகள் பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசுகளால் கட்டப்பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் கோயில் மாலிக்காபூர் படையெடுப்பால் அழிக்கப்பட்ட நேரத்தில் அங்கிருந்த இரண்டு விக்ரகரங்களை திருப்பதி மற்றும் சிங்கவரம் கோயில்களில் பாதுகாத்து வைத்திருந்து, பின் ஸ்ரீரங்கம் எடுத்துச் சென்று புனருத்தாரணம் செய்து அமைத்தார்கள் என்பதும் இக்கோயிலுக்குள்ள பெருமைகளில் ஒன்று.
குடைவரைக்கோயில் அமைவதற்கு முன்பே இவ்விடத்தில் ‘வராகசுவாமி’ திருத்தலம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கோயிலில் பண்டைய கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை ஆராய்ந்தால் இன்னும் பல அரிய கருத்துக்களைத் தெரிந்து கொள்ளலாம்.
வைகுண்ட ஏகாதசி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து மகிழ்கின்றனர். இக்கோயில் மலைமீது இருப்பதால் இங்கு பகவானை தரிசிக்கும்பொழுது ஸ்ரீ மகாவிஷ்ணுவை வைகுண்டத்திலும் திருப்பாற்கடலிலும் தரிசிக்கும் புண்ணியத்தை பெறலாம். மாசி மகத்தன்று புதுச்சேரி கடற்கரையில் சிங்கவரம் ரங்கநாதருக்கு தீர்த்தவாரி நடைபெறும். 800 ஆண்டுகளாக இந்த வைபவம் சிங்கவரம் செஞ்சி ரங்கநாதருக்கு நடைபெறுவதாக கூறப்படுகிறது.
கோவில் அமைவிடம் : செஞ்சி பேருந்துநிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் சிங்கவரம் உள்ளது.
தொடர்புக்கு – ஏழுமலை செல் : 9486911916
இளம்கீர்த்தி, செல் : 9345879028
ப.பரசுராமன்
ப. வசந்த்
The post ஒரே பாறையில் குடையப் பெற்ற 24 அடி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் appeared first on Swasthiktv.