சனி பகவான் ஸ்தான மற்றும் பார்வை பலன்கள்
சனி என்பவர் யார்
சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள்.
அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்று பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டு தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள். இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர்.
இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார்.
சனிபகவானின் பார்வை
சனிபகவானின் பார்வையானது மிகவும் தீட்சண்யம் வாய்ந்தது. இளம் வயதில் இருந்தே சனி பார்வை விழிகளில் அபார சக்தி இருந்தது. அவரது உக்கிர பார்வைபட்டவர்கள் பலம் இழந்து விடுவார்கள் என்பது ஜதீகமாகும். ஒரு சமயம் சிவனிடம் அரிய வரம் பெற்ற ராவணன் நவக்கிரகங்களை அடக்கி தன் வீட்டில் படிக்கட்டுகளாக குப்புறப்போட்டு வைத்திருந்தான்.
அதை பார்த்த நாரதர், ராவணா சனியை நேருக்கு நேர் பார்க்க பயமா? என்று கேட்டார். உடனே ராவணன் ஆவேசத்துடன், சனியே என்னை நன்றாக நிமிர்ந்து பார் என்று கூறினான். சனியும் நிமிர்ந்து பார்க்க, மறு வினாடியே ராவணனிடம் இருந்த சக்தி பலம், வீரம், வரம் எல்லாம் போய் விட்டது அவனை ராமர் மிக எளிதாக வென்றார்.
சனியின் பார்வைக்கு இத்தகைய அபார சக்தி உண்டு. சனி பார்வை தனித்துவம் கொண்டது என்பதற்கு இது போன்று பல உதாரணங்களை சொல்லலாம்.
சனி பகவான் ஸ்தான பலன்கள்
சனிபகவான் உச்ச, ஆட்சி, நீச வீடுகளில் அளிக்கும் பலன்களைக் காண்போம். சனி பகவான் துலாத்தில் உச்சம் அடைகிறார். மேஷத்தில் நீசம் அடைகிறார். மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் ஆட்சி பெறுகிறார். சனி பகவான் உச்சம் பெற்றிருப்பாரானால் அந்த ஜாதகர் எதையும் நல்ல முறையில் செய்து பலரது பாராட்டைப் பெறுவார்.
மனோதிடம், தீர்க்காயுள் பெற்று தொழில் துறையில் சிறந்து விளங்குவார். சனி பகவான் ஆட்சி பெற்றிருப்பாரானால் சுகபோக வாழ்க்கையுண்டாகும். தொழில் வளம் சிறக்கும். விவசாய நன்மை விருத்தியாகும். வாகன யோகமுண்டு. பிரயாண லாபம் உண்டாகும். சனி பகவான் நீசம் பெற்றிருப்பாரானால் நாத்திக வாதம் புரிவார்.
சாஸ்திர சம்பிரதாயங்களை நம்ப மாட்டார். எதற்கும் மனோ தைரியம் இருக்காது. கீழ்த்தரமானவர்களுடன் நட்பு கொள்வார். கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய வீடுகளில் சனி பகவான் பகை பெறுகிறார். சனி பகவான் பகை வீட்டிலிருப்பாரானால் உடல்நலம் அடிக்கடி பாதிக்கும். எதிலும் எப்போதும் ஒருவித சலிப்பான உணர்வு மிகுந்து காணப்படும். உற்றார், நண்பர் ஆதரவு இருக்காது.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post சனி பகவான் ஸ்தான மற்றும் பார்வை பலன்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.