சிவசக்தி ரூபமாக, சங்கர நாராயணனாக இணைந்து காட்சி தரவும் ‘அரியும் அரனும் ஒண்ணு அறியாதார் வாயில் மண்ணு’ என்ற கிராமத்துக் குழந்தைகள் சொல்லும் உண்மையை எடுத்துக் காட்டவும் இச்சந்தர்ப்பத்தில் மோஹினி அவதாரம் செய்து பெண்ணுருக் கொண்டிருந்த மஹாவிஷ்ணுவுடன் ஆணுருக் கொண்டு காட்சி தந்த பரமேஸ்வரன் இணைய இந்த திருவிளையாடலில் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் சிலர் கூறுவது போல ஒரு பாற்புணர்ச்சி என்று இதனைக் கருதக்கூடாது. அப்படிக் கருதுவது இங்கு பொருத்தமானதுமல்ல. இங்கே இருவரும் ஒருவர். அவ்விருவரில் தோன்றிய மூன்றாமவரும் ஒருவரே.
நாவலந்தீவில் தேக்க மர நீழலில் நடந்த கூடலில் அரிகரபுத்திரர் அவதரித்தார். லோகரட்சகராக இறைவனால் உடனேயே பணி நியமனமும் மேற்படி ஐயப்ப தேவருக்கு வழங்கப்பெற்றதாகவும் கந்தபுராணத்தின் ‘மகா சாத்தாப்படலம்’ சொல்லும். கந்தபுராணம் இப்பெருமானின் தோற்றப்பொலிவைக் காட்டும் போது,
மைக்கருங்கடல் மேனியும் வானுலாம்
செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய்
உக்கிரத்துடன் ஓர் மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீக்கினான் என்று கூறும்.
மேலும் கந்தபுராணம் சிவகுமாரர்களான விநாயகர், முருகப்பெருமான், போன்றோருக்கு இளவலாக தம்பியாக இக்கடவுள் கொள்ளப்படுவார் என்கிறது. தேவர்களையும் யாவரையும் காக்கும் பொறுப்பில் ஐயனார் என்ற இக்கடவுள் என்றும் ஈடுபட்டிருப்பதாகக் காட்டுகிறது.
ஸ்காந்தத்தின் அடிப்படையில் கந்தபுராணம் இவ்வாறு ஐயப்பனின் அவதாரத்தைக் காட்ட பத்மபுராணம் பஸ்மாசுரனை அழிக்க சிவபெருமான் எழுந்தருளிய போது பஸ்மாசுரனை மயக்கி அழிக்க திருமால் மோஹினி வடிவம் கொள்ள, அப்பொழுது பிறந்தவரே ஐயனார் என்று காட்டுகிறது. இதே போலவே தாருகா வனத்து முனிவர்களின் கடவுள் நிந்தனையையும் செருக்கையும் அழிக்க பிட்சாடனராக சிவபெருமான் வந்த போது மோஹினி வடிவம் கொண்ட திருமாலும் இணைந்து பிறந்தவரே ஐயனார் என்பதும் வரலாறு.
‘ஆதியும் அந்தமுமில்லா அரும் பெரும் சோதி’ ஆகிய இறைவன் அடியவர்களின் நலன் கருதி திருவிளையாடல்கள் புரிகிறான். ஆதில் சில உண்மைகளை நிலை நிறுத்திக் காட்ட புராணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் இறைவனையே அளக்கவோ, அவனின் பிறப்பை அறியவோ முற்படுவது விநோதமானது , உண்மையில் அது எவராலும் இயலாதது என்பதையே இக்கதைகள் புலப்படுத்தி நிற்கின்றன எனலாம்.
தமிழ் இலக்கியங்களினூடு நயந்து பேசப்படும் ஐயனார்
சூரபத்மனால் வருந்திய இந்திரன் சீர்காழியில் இந்திராணியுடன் மறைந்து வாழலானான். அப்பொழுது தேவர்களுக்காக இறைவனை வேண்ட திருக்கைலைக்கு அவன் செல்ல நேரிட்டது. அப்போது தனித்தவளாயிருந்த இந்திராணிக்கு அசுரர்களால் தீங்கு நேரிடுமோ என்று அஞ்சிய அவன் ஐயனாரைத் துதித்து அவரைக் காவலாக எழுந்தருளியிருக்க வேண்டினான்.; ஐயனார் தனது சேனாபதிகளில் ஒருவரான மஹாகாளர் என்பரை இந்திராணிக்கு காவலாக நியமித்தார்.
இந்திரன் எதிர்பார்த்தது போலவே சூரனின் தங்கை அசமுகி இந்திராணியைக் கண்டு அவளின் அழகைப் பார்த்து ‘இவளை நாம் கொண்டு போய் நம் அண்ணனிடம் கொடுப்போம்’ என்று துணிந்து அவள் சிவபூஜை செய்து கொண்டிருந்த சோலையை அடைந்து, இந்திராணியின் கையைப் பிடித்து இழுத்தாள். இவ்வமயம் அஞ்சிய இந்திராணி தன் காவல் நாயகராகிய ஐயனாரை நோக்கி தன் அபயக்குரலை வெளிப்படுத்தி அழுதாள்.
பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம், விண்ணோர் ஆதியே ஓலம், செண்டார்
கையனே ஓலம், எங்கள் கடவுளே ஓலம், மெய்யர்
மெய்யனே ஓலம், தொல்சீர் வீரனே ஓலம், ஓலம்!
இந்த அழுகுரலைக் கேட்டு ஓடி வந்த ஐயனாரின் சேனாபதியாகிய வீரமஹாகாளர் அசமுகியின் இழுத்த கையை அறுத்தெறிந்தார். இவ்விடம் இன்றும் சீர்காழியில் ‘கைவிடான் சேரி’ என்று வழங்கப்பெறுவதுடன் அங்கு ஐயனாருக்கு திருக்கோயிலும் அமைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஆக, இந்திராணியின் திருமாங்கல்யத்தைக் காப்பாற்றிய முருகக் கடவுளுக்கு இளையவரான ஐயனாரின் பெருமையும் முருகனின் புகழ் சொல்ல வந்த கந்தபுராண காவியம் தெளிவுறக் காட்டுகிறது எனலாம்.
பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தம் வாழ்வின் நிறைவில் திருக்கைலாசத்திற்குச் சென்ற போது அவருடன் கைலாசத்திற்கு எழுந்தருளிய சேரமான் பெருமாள் நாயனார் ‘திருக்கைலாச ஞான உலா’ என்ற பிரபந்தத்தை பாடினார். அதனை கைலாசத்திலிருந்து கேட்டு தமிழகத்தின் திருப்பிடவூருக்குக் கொண்டு வந்து வெளிப்படுத்தி தமிழ்த் தொண்டாற்றியவராகவும் ஐயனார் பெருமானைக் காட்டுவர். பேரம்பலூருக்கு அருகிலுள்ள திருப்பிடவூர் என்ற இவ்வூரிலுள்ள ஐயனார் இன்றும் கையில் புத்தகத்துடன் காட்சி தருவதாகச் சொல்கிறார்கள். இவரை ஊர் மக்கள் ‘அரங்கேற்றிய சாமி’ என்று அழைக்கிறார்களாம்.
ஈழத்துச் சிதம்பர தலபுராணத்தில் இக்கதையை,
சேரமான் அருளிச்செய்த திருவுலாத் தெய்வ வெற்பில்
நேருறக் கேட்டு முந்நீர் நெடும்புவி உய்யுமாறு
சீருறு சோலை சூழ்ந்த திருப்பிடவூரை நண்ணி
ஆரவே சொல்லி வைத்த ஐயனே போற்றி போற்றி
என்று கூறுவதைக் காணலாம்.
மூக்கில் விரலை வைத்து முகுந்தன் மகன் சிந்திப்பதென்ன?
– சபரிமலை யாத்திரை தொடரும்….
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post சபரிமலை யாத்திரை பாகம் –16 appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.